துபாய் 1980களின் தொடக்கத்தில் …..
(1980களில் துபாய் சென்று இறங்கியவர்களின் நெஞ்சில் நிற்கும் பசுமையான நினைவுகள். அவர்களுக்கு இந்த படைப்பு சமர்ப்பணம் )
தொழுகை நேரங்களில் ஒரே நேரத்தில் பல பள்ளிவாசலில் இருந்து வரும் பாங்கு சப்தம் .
கொளுத்தும் வெயில் …..
கொப்பளிக்கும் வியர்வை…
ஏசி யோடு வாழ்க்கை …
மதுக்கூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த அனைத்து முஸ்லிம் தமிழ் மக்கள் ஒன்றாய் கூடும் கோட்டைப் பள்ளி .
பாகிஸ்தானிகள் நெருப்பில் சுட்டு எடுத்துக்கொடுக்கும் தந்தூரி ரொட்டி .
பேக்கரிகளிலும் , சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும் லெபனானி குபூஸ் .
முனீர் ஹோட்டலில் முண்டியடித்துக்கொண்டு வாங்கி சாப்பிட்ட சிக்கன் லெக் ப்ரை ..
மலையாள சேட்டன்களின்(அண்ணாச்சிகள்) உணவகங்களில் மூன்று திரகத்திற்கு நம் வயிற்றை நிரப்பிய மத்தி மீன் குழம்போடு கூடிய மோட்டா செட். (புழுங்கரிசி சாப்பாடு)
தமிழ் மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட காலித் பிரியாணி ..
எந்தப் பக்கம் திரும்பினாலும் காட்சிதரும் மலையாளிகளின் திருமுகங்கள் .
காலணா கொடுத்து கடலை கடந்த துபாய் அபுரா… (படகு சவாரி)
அவ்வப்போது கடைவீதிகளில் தென்படும் தமிழ் நடிகர்களும் , பிரபலங்களும் …
குளிர் காலங்களில் வாரம் தோறும் சென்று குளித்துவிட்டு வரும் ராசல் கைமா சுடு தண்ணீர் குளம் . (ஹத்)
பேச்சிலர் வாழ்க்கையில் வெளியூர் காரர்களாக இருந்தாலும்…
வெளி நாட்டுக்காரர்களாக இருந்தாலும்…. நம்முடன் அன்னியோன்னியமாக பழகிய மனிதர்கள் .
நாள்தோறும் உழைத்துவிட்டு வெள்ளிக்கிழமை மட்டும் காலை பதினோரு மணிவரை தூங்கும் ஆழ்ந்த உறக்கம் .
படிப்பில்லாமல் வந்திறங்கி வேலையின்றி பரிதவித்த மக்களை பாசத்தோடு வாரியணைத்து பணிகள் வழங்கிய பல்தியா.(நகராட்சி).
(அன்று பல்தியாவில் வேலை பார்த்தவர்களின் பிள்ளைகள் பலர் இன்றைக்கு பட்டதாரிகள்)
நோன்பு காலங்களில் மகிழ்ச்சியுடன் மாறிப்போன இயல்பு வாழ்க்கை. ஊரே மணக்கும் பிரியாணி வாசம் .
நோன்பு முப்பது நாட்களுக்கும் துபாய் குவைத் பள்ளியில் மட்டுமே கிடைக்கும் நோன்புக்கஞ்சி.
விடுமுறையில் ஊருக்குச் செல்ல தேதி குறிக்கப்பட்ட உடன் உள்ளத்தில் எழும் கிளர்ச்சி.
திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் துபாய் திரும்பிய பின் இல்லத்தரசியின் பிரிவை ஏற்க முடியாமல் தூக்கம் தொலைத்த இரவுகள் .
முதல் குழந்தை பிறந்த செய்தி கேட்டவுடன் நம்மோடு இருப்பவர்களுக்கு நாம் வாங்கிக் கொடுத்த சாக்லேட்.
இவை அத்தனையும் துபாயை முடித்துக்கொண்டு ஊரில் தங்கி இருப்பவர்களில் மறக்க இயலா மகரந்த நினைவுகள் .
KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் ….
07.01.2022.